கோவை, புலியகுளம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை, புலியகுளத்தில் இருந்து சௌரிபாளையம் செல்லும் சாலையில் சாக்கடைக் கால்வாயில் இருந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீட்கப்பட்டது.
போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அம்மன் குளத்தைச் சேர்ந்த நாகராஜ் (37) என்பதும், இவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக திருச்சி சாலை, ஹைவேஸ் காலனியை சேர்ந்த ரமேஷ் (24), அம்மன் குளத்தைச் சேர்ந்த வினோத் என்கிற ஆவி வினோத் (22), கணபதியைச் சேர்ந்த எஸ். சிவா என்கிற விஷ்ணு (24), ஜோஸ். ஜெய் ஆகாஷ், லியோ மார்ட்டின் உள்ளிட்ட 6 பேரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர்.
இதில், ரமேஷ், ஆவி வினோத், விஷ்ணு ஆகியோர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆகவே, அவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆய்வாளர் டி. பரணிதரன், காவல் ஆணையர் அ.அமல்ராஜுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.