போனஸ் சதவீதத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிறுவனமான டேன் டீ தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு கூடுதல் போனல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை எஸ்டேட் அலுவலகம் முன்பு காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பணிக்குச் சென்ற அவர்கள் மாலையில் பணி முடிந்து வந்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, தேயிலைத் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் பணியைப் புறக்கணித்து தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
வருடந்தோறும் 20 சதவீதம் போனஸ் வழங்கி வந்தனர். ஆனால் இந்த வருட போனஸ் தொகையை நிர்வாகத்தினர் குறைக்கின்றனர். தனியார் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தேயிலை தூள்கள் ரூ. 150 வரை விற்கப்படுகின்றன. ஆனால், இடைத்தரகர்களால் ரூ. 80-க்கு மேல் டேன் டீ தேயிலைத் தூள் விற்கப்படாமல் உள்ளது. இதற்கு தொழிலாளர்கள் காரணமல்ல என்றனர்.