டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் திவ்யஸ்ரீ (3). இக்குழந்தை கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சை அளித்து வந்தனர்.
பரிசோதனையில் அக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தை திவ்யஸ்ரீ கோவை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. இதேபோல் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கணபதிபுதூரைச் சேர்ந்த தாஜ் (10) என்ற சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இளம் பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தாரா (30), இவருக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து தாராவுக்கு தீவிரக் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்:
கோவை மாநகராட்சி 47-ஆவது வார்டுக்கு உள்பட்ட பாலன் நகர், செக்கான் தோட்டம் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் உள்ளது.
இந்தக் கழிப்பிடத்தை இடிக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பொதுக் கழிப்பிடத்தில் மழை நீருடன், கழிவு நீரும் தேங்கி உள்ளது.
இதனால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாகவே தாஜ் என்ற 11 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக் குழு உறுப்பினர்கள் நாராயணன், முத்துசாமி தலைமையில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு வாரத்துக்குள் கழிப்பிடம் இடிக்கப்படுவதுடன், பாலன் நகர் முழுவதும் சுத்தம் செய்து தரப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.