கோவை முத்தண்ணன் குளக்கரையோரத்தில் அமைந்துள்ள குமாரசாமி காலனி மக்களை அப்புறப்படுத்தும்போது அவர்களுக்கு மாநகருக்குள் மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை குமாரசாமி காலனியில் சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அங்குள்ளவர்களை அப்புறப்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களை தற்போது உள்ள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மாநகரையொட்டிய இடத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார். கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.தங்கவேல், ஜே.ஜேம்ஸ், அசரப் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து இரா.முத்தரசன் கூறியதாவது: இந்தப் பகுதி மக்கள் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீரகேரளத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றார்.