கோவையில் மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்தியது தொடர்பாக 2 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் மருந்துக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் (40). இவர் தொழில் விஷயமாக கோவையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரிடம் ரூ. 22 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை 10 நாள்களில் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் தன்ராஜ் பணத்தை செலுத்தவில்லை. மேலும், கடனைச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் தன்ராஜ் வீட்டுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு வந்துள்ளனர். பின்னர் அவரை வெளியே அழைத்து காரில் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, அதிகாலை 3 மணி அளவில் அவரை வீட்டுக்கு வெளியே இறக்கி விட்டு விட்டுச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய காரமடையைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் (34), சௌரிபாளையத்தைச் சேர்ந்த அவினேஷ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனர்.