கோவையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) முதல் 3 நாள்களுக்கு உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஹோட்டலியர்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் பாலா கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கோவையில் 3-ஆவது உணவுத் திருவிழா வ.உ.சி. மைதானத்தில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில், கோவையின் அனைத்து முன்னணி ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் ஒரே இடத்தில் தங்களது உணவு வகைகளை விற்பனைக்கு வைக்க உள்ளனர்.
இதில், சைவம், அசைவம், இனிப்பு, காரம் போன்ற உணவு வகைகள் முதல் ஐஸ்கிரீம்கள், கேக்குகள், பழரசங்கள் உள்ளிட்டவற்றுடன் தமிழர்களின் கலாசார உணவு வகைகள், கோவை மண்டலத்தின் புகழ் பெற்ற உணவு வகைகள் யாவும் இடம் பெற உள்ளன.
மேலும், உணவுத் திருவிழாவையொட்டி தினமும் வெள்ளித்திரை, சின்னத் திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள், வேடிக்கை விளையாட்டுகள், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், உணவு தொடர்பான கருத்தரங்கு போன்றவை இடம் பெற உள்ளன என்றார்.
விற்பனைத் திருவிழா
இதேபோல் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக மாபெரும் விற்பனைத் திருவிழாவான "அங்காடி- 18' கோவையில் வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சரவணம்பட்டியில் உள்ள புரோசான் மாலில் கே.சி.டி. மேலாண்மைத் துறை மாணவர்களால், அனைத்துக் கல்லூரி மேலாண்மைத் துறை மாணவர்கள் பங்கேற்கும் இந்த விற்பனைத் திருவிழா தினசரி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
இதில், பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருள்கள், உடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்கள் 75 கடைகள் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட இருப்பதாக விற்பனைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.