மேட்டுப்பாளையத்தை அடுத்த நால்ரோடு ஸ்ரீ குமரன் கலை,அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அமாசையப்பன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் சுப்பிரமணியன், அறங்காவலர் மருதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் வரவேற்றார்.
முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, திருச்சி பாரதி கலைக் குழுவினர் சார்பில் கலைக்குழு இயக்குநர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளட்டவை நடைபெற்றன. இதில், சமூக ஆர்வலர் நசீர், பேராசிரியர்கள் சண்முகப்ரியா, ஜீன் பெர்தா, லதா, சக்திவேல், கிருஷ்ணவேணி, வனிதா, டேவிட் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியை வித்யாந்தினி நன்றி கூறினார்.