சூலூர் அருகே தோட்டத்தில் தனியே இருந்த மூதாட்டியிடம் இருந்து 7 பவுன் தாலிக் கொடியை வியாழக்கிழமை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பூராண்டாம்பாளையம் உப்பிலியந்தோட்டத்தில் வசிப்பவர் கருப்புசாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (65). இந்நிலையில் தோட்டத்தில் மயிலாத்தாள் மட்டும் வியாழக்கிழமை மதியம் இருந்துள்ளார். அப்போது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உங்களுக்கு கால் வலிப்பதாக கூறினர். அதற்கு மருத்து வழங்க வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் திடீரென மயிலாத்தாள் அணிந்திருந்த தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.