மறைந்த இயற்பியல் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் கோவை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
துறைத் தலைவர் இணைப் பேராசிரியர் பி.மீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு துறையின் உதவித் தலைவர் ஜெ.பாலவிஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில், பேராசிரியர் மீனா பேசும்போது, அண்டவியல் குவாண்ட்டம் ஈர்ப்பு ஆகிய ஆராய்ச்சித் துறைகளில் நவீன உலகின் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்டீபன், கருந்துளைகளுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
21 வயதிலேயே, தீவிர நரம்பு பாதிப்பு நோயால் உடலியக்கங்கள் பாதிக்கப்பட்டு பேச்சை இழந்த நிலையிலும் கணினி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் சிறந்து விளங்கினார். ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் என்றார்.
இதில், உதவிப் பேராசிரியர்கள் லாவண்யா, பிரியதர்ஷினி, பிரவீணா, சுபன்யா, இயற்பியல் ஆராய்ச்சி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.