எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள், அங்கு உள்ள கோயில், கடை, குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளன.
வால்பாறை எஸ்டேட் வனப் பகுதியில் இருக்கும் யானைகள் உணவு, குடிநீர் தேடி அங்கிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 3 மணிக்கு 6 யானைகள் வந்துள்ளன. அவை, அங்குள்ள முனீஸ்வரன் கோயிலை முட்டித் தள்ளிச் சேதப்படுத்தியுள்ளன. பின்னர், அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரன் என்பவரது டீக்கடை மற்றும் முனியாண்டி என்பவரது குடியிருப்பு ஆகியவற்றையும் முட்டித் தள்ளிச் சேதப்படுத்தின.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர் விடியவிடிய போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினர்.