சிறுமுகை அருகே ஆடுகளை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 ஆடுகள் உயிரிழந்தன.
கோவை அருகே உள்ள தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (52). ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர், கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து 100 ஆடுகளை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். சிறுமுகை அருகே அம்மன்புதூர் பகுதியில் வந்தபோது மழைதூறல் காரணமாக, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோரம் புதன்கிழமை கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன. தர்மராஜ் படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த சிறுமுகை காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி காவல் ஆய்வாளர் திலக் உள்ளிட்ட போலீஸார் தர்மராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.