கிணத்துக்கடவு அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்கள் பாபு (19), நாகேந்திரபாரதி (19), ராஜு (15). இவர்கள் மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவில் உள்ள நண்பர் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். மீண்டும் அங்கிருந்து பொள்ளாச்சிக்குத் திரும்பியுள்ளனர்.
கிணத்துக்கடவை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில்தூக்கிவீசப்பட்ட மூன்று பேரும் காரின் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீஸார் மூவரின் உடலையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த நாகேந்திரபாரதி பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்துவந்தார். ராஜு, சமத்தூர் அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். பாபு, புதுக்கோட்டையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்துவந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான கார் ஓட்டுநர் தங்கவேலை போலீஸார் தேடிவருகின்றனர்.