துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் இந்து அமைப்பின் நிர்வாகி வீடு மீது ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தடாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பன்னிமடையில் உள்ள ஆண்டாள் அவென்யூவில் வசிப்பவர் சுபாஷ். இவர், அகில பாரத இந்து மகா சபை மாநில இளைஞரணித் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது வீடு முன்பு வெடிச் சத்தம் கேட்டு, சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, இவரின் வீடு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் சுபாஷின் வீட்டுக் கதவு சேதமடைந்தது.
தகவலறிந்த தடாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.