கோவையில் சாலை விபத்துகளில் 3 பேர் சாவு

கோவையில் நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.  

கோவையில் நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.  
கோவை, பேரூரை அடுத்த மாதம்பட்டியைச் சேர்ந்தவர் அருள் ஆரோக்கியம் (40). இவர், தனது மனைவி செபஸ்டியன் செலினுடன் சிறுவாணி சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் இருசக்கர வாகனத்தை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அருள் ஆரோக்கியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஆலாந்துறையைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் கௌதம் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நவம்பர் 6ஆம் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் சென்ற வாகனம் திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜெகதீஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோவை, வடவள்ளி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (58). இவர், கோவை கல்வீரம்பாளையம் சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பழனிசாமி உயிரிழந்தார். 
இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com