அன்னூர் ஒன்றியம், ஆணையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சாரதா டெய்ரி புராடெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 1.20 லட்சம் நிதி உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
அன்னூர் காட்டன் மில்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாரதா டெய்ரி புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் சமுதாய நலப் பணிகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக ரூ. 1.20 லட்சத்துக்கான காசோலையை சாரதா டெர்ரி புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம் கிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியர் ரகுவிடம் வழங்கினார். மேலும் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவர்கள், உள்ளாட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.