சூலூர் அருகே கலங்கல் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து போபால் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள திட்டமிடுதல் மற்றும் கட்டடக் கலை கல்லூரியைச் சேர்ந்த 65 மாணவர்கள் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் 4 பேராசிரியைகளும் கோவை வந்துள்ளனர்.
இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை அமல்படுத்துதல் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதன்படி கலங்கல் ஊராட்சிப் பகுதிக்கு வந்தனர்.
இதுகுறித்து அக்கல்லூரி பேராசிரியைகள் கூறியதாவது:
தமிழக அரசு கோவை மாவட்டத்தில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதுகுறித்து எங்கள் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து அதன் புள்ளி விவரங்களை சேகரித்து அரசிடம் அளிக்க உள்ளோம். கோவை வடக்கு, கோவை தெற்கு, பொள்ளாச்சி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் தகவல்களை சேகரிக்க உள்ளோம் என்றனர்.
இந்த ஆய்வில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை கலங்கல் ஊராட்சி செயலாளர்(பொறுப்பு) சண்முகம் அளித்தார்.