உலக மொழிகளை இணைக்கக் கூடியதாக மொழிபெயர்ப்பு திகழ்கிறது என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார்.
கோவை பூ.சா.கோ. அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், நல்லி திசைஎட்டும் இதழ் சார்பில் 15 ஆம் ஆண்டு மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மொழிபெயர்ப்பாளர்கள் க.பூரணச்சந்திரன், அ.சு.இளங்கோவன், அக்களூர் ரவி, இராம.குருநாதன், கே.நல்லதம்பி, எம்.எஸ். ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு நல்லி குப்புசாமி செட்டியார், சக்தி குழுங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது: மொழிபெயர்ப்பு என்பது தனித் துறையாக வளர்ந்து, மொழிபெயர்ப்பியல் ஆகத் திகழ்கிறது. மொழிபெயர்ப்பால் பிற மொழி இலக்கியத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் நம்முடைய மொழியை வளப்படுத்திக் கொள்ள முடியும். நமது மொழியில் உள்ள கருத்துகளை வேறு மொழிக்கு கொண்டுச் செல்கிறோம். மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியத்தின் போக்கை மாற்றக் கூடியவை ஆகும். மொழி பெயர்ப்பு உலக மொழிகளையும், மனித மனங்களையும், கண்டங்களையும் இணைத்து பாலமாக இருந்து வருகிறது என்றார்.
சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் பேசியதாவது:
ஒவ்வொருவருக்கும் பாரம்பரியம் உள்ளது. அந்த பாரம்பரியத்தை அறிய மொழி உதவுகிறது. நமது கலாசாரத்தை மொழி மூலம் அடுத்தவர்களுக்கு கொண்டுச் செல்ல முடியும். அதே போல பிறருடைய கலாசாரத்தையும் அறிய முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கல்லூரி நிர்வாகத் தலைவர் ர.நந்தினி, செயலாளர்
நா.யசோதாதேவி, முதல்வர் எஸ்.நிர்மலா, திசைஎட்டும் காலாண்டிதழ் ஆலோசகர் ஆர்.நடராஜன், ஆசிரியர் குறிஞ்சிவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.