கோவை அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 6 கரித் தொட்டி ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டுவந்த தேங்காய் தொட்டியில் இருந்து கரி தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால் நோய் பரவுவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து காங்கயம், தாராபுரம், வெள்ளக்கோவில், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த கரித் தொட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதேபோல கோவை மாவட்டம், மதுக்கரை ஓராட்டுகுப்பை பகுதியில் கரித் தொட்டி ஆலைகள் இயங்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தும் இந்த ஆலைகளை மூடவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதில் சில ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த 6 கரித் தொட்டி ஆலைகளை மின் வாரியம், வருவாய்த் துறை, தொழிற்சாலைத் துறை உதவியுடன் அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.