முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு அவசர கதியில் நிறைவேற்றியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு அவசர கதியில் நிறைவேற்றியுள்ளது. இது அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். இது முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டமாக அமையாது. தலாக் என்பது குறித்த வரையறை குழப்பமாக உள்ளது. இதனை எதிர்த்து முஸ்லிம் மற்றும் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 7ஆம் தேதி திருச்சியில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
கோவையில் இந்து இயக்கத் தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளது அநீதி ஆகும். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது குறித்து காவல் துறையால் இது வரையில் தெரிவிக்க முடியவில்லை. ஊகங்களின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.