உலக வன உயிரின வாரவிழாவை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) எஸ்.செண்பகப்பிரியா வெளியிட்டுள்ள செய்தி:
உலக வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் 8 ஆம் தேதி வரையில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், விநாடி-வினா, பேச்சு ஆகிய போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் நேரில் வந்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதில் 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வன உயிரினங்களைப் பாதுகாத்தலின் அவசியம் குறித்து தமிழ், ஆங்கிலத்தில் பேசலாம். ஆனால் ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு, வன உயிரினங்களைப் பாதுகாத்தலின்அவசியம் என்ற தலைப்புகளில் எல்.கே.ஜி.முதல் கல்லூரி மாணவர்கள் வரை மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் வெள்ளை நிற வரைதாள்களையும், வரைபொருள்களையும் கொண்டுவர வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வன அலுவலகம் 0422-2456911, தினேஷ்குமார், உதவி வனப் பாதுகாவலர் 94430-82214, எஸ்.சுரேஷ், கோவை வனச் சரகர் 90470-66460 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.