தமிழக சிறைச் சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து முன்னணி நிர்வாகியாக இருந்த சசிகுமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகியாக இருந்த சசிகுமார் படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல் துறையினரின் தவறான, பலவீனமான நடவடிக்கையால் குற்றவாளிகள் வெளியே வந்துள்ளனர்.
ஆடிட்டர் ரமேஷ், டாக்டர் அரவிந்த ரெட்டி, பாடி சுரேஷ், வெள்ளையப்பன் ஆகியோரின் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி, அரிசி, பருப்பு, செல்லிடப்பேசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணமான சிறைக் காவலர்கள் மாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தை தொடர்ந்துதான் தமிழக சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக தமிழக சிறைச்சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன. சிறைகளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.