வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் 37 வகையான பறவைகள் உள்ளன.
வால்பாறை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். தேயிலை தோட்டங்களை ஒட்டி அடர்ந்த வனப் பகுதி அமைந்துள்ளது. இதையொட்டி கேரள மாநில வனப்பகுதி இணைந்துள்ளது. இந்தப் பகுதிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் குறிப்பாக இங்கு காணப்படும் இருவாச்சி பறவைகளை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், பறவை ஆர்வலர்கள் வந்து செல்வார்கள்.
இனப்பெருக்க காலத்தில் இருவாச்சி பறவை மரத்தின் மீது துளையிட்டு பின் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சிகளைப் புகைப்படம் எடுக்க பறவை ஆர்வலர்கள் பல மணி நேரம் காத்திருப்பார்கள். இதனிடையே வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் பறவை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்து அந்தப் பகுதி வனத்தில் இருக்கும் பறவைகள் மற்றும் வனத்துக்கு வெளியே இருக்கும் பறவை என்று மொத்தம் 37 வகையான பறவைகளின் பெயர்களை பலகையில் எழுதி வைத்துள்ளனர்.
இந்த பலகை வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.