கோவை போத்தனூர் பகுதியில் ஆன்லைன் (3 நம்பர்) லாட்டரி விற்பனை செய்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட குறிச்சி, குனியமுத்தூர், சுகுணாபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர போலீஸாரும் அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை, போத்தனூர் காவல் எல்லைக்கு உள்பட்ட குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், போத்தனூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த குறிச்சியைச் சேர்ந்த பி. சஞ்சய் காந்தி (35), கே. சிவசந்திரன் (35), ஜெ.வினோத்குமார் (23) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 22 லட்சத்து 67 ஆயிரம் ரொக்கம், 4 மடிக்கணினிகள், 6 செல்லிடப்பேசிகள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய சிலரையும் தேடி வருகின்றனர்.