கோவையை அடுத்த சிந்தாமணிப்புதூர் அருகே மூவர் கொலை வழக்கில் கைதான மோகன்ராமை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சூலூர் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
கோவையை அடுத்த சிந்தாமணிப்புதூர் அருகே தஞ்சாவூரைச் சேர்ந்த மகாதேவன் என்கிற மாதவன் (32), அவரது உறவினர்களான தியாகு என்கிற தியாகராஜன்(23), அருண் (22) ஆகியோர் 2015 ஆகஸ்ட் 26ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு 19 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான மோகன்ராமை கோவை, தனிப்படையினர் சில நாள்களுக்கு முன்னர் மும்பையில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மோகன்ராமை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சூலூர் காவல் துறையினர் விரைவு நீதிமன்றம் (எண் 2) இல் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றும், அப்போது மோகன்ராமை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் ஆர்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.