மூலப் பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்றவை காரணமாக பம்ப்செட்டுகளின் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும், எனவே இவற்றை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தென்னிந்தியப் பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சீமா தலைவர் வா.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டிலேயே கோவையில் மட்டும்தான் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெற்றுள்ள 300க்கும் மேற்பட்ட பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
இந்திய பம்ப்செட் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 13 ஆயிரம் கோடியாக உள்ளது.
கோவையில் உள்ள 600 நிறுவனங்கள் மூலமாக ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பம்ப்செட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் தேவையில் 45 சதவீதத்தை கோவை நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் மூலப் பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, தரமற்ற மின்சாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் பம்ப்செட்டுகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். அதேநேரம், ஸ்மார்ட் பம்ப்செட்டுகள் உருவாக்கும் திட்டம், ஸ்மார்ட் வால்வு கிளஸ்டர் திட்டம் போன்றவற்றால் கோவையில் பம்ப்செட்டுகள், வால்வுகளின் உற்பத்தி அதிகரிக்கும் என நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.