மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு திருமஞ்சனம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கல்யான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாத விரதம் மேற்கொண்ட்ட பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள்உள்ளிட்டவற்றை தலைவாழை இலையில் வைத்து தாசர்களுக்கு படையலிட்டனர்.
கோயில் நடை திறக்கப்பட்டதில் இருந்து மாலை வரை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
மதுக்கரை: வெள்ளலூரில் உள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் பண்டரி பஜனைக் கோயிலில் காலை 6 மணிக்கு அகண்ட நாம சங்கீர்த்தனத்துடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது.
தொடர்ந்து, காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு திருக்கல்யாணம், மூலவருக்கு அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு முக்கிய நிகழ்வான உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.