சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் தொடர் திருட்டுகளைத் தடுக்க சூலூர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சூலூர் உதவி ஆய்வாளர் லெனின் அப்பா துரை தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சூலூர் அருகே உள்ள ஜெர்மன் கார்டன் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவரை சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், தவசி கொடி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அருண்குமார் (22) என்பதும், தற்போது துடியலூர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் சூலூர் பகுதியில் உள்ள சிறுவாணி சாலையில் நடந்த நகை பறிப்பு சம்பவத்திலும், காடாம்பாடி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருடிய சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 22 பவுன் நகைகளை சூலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்பு அவரைக் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, வியாழக்கிழமை இரவு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.