கோவை, சாய்பாபா காலனியில் திருக்குறள் உலகம் கல்விச் சாலை தொடங்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கி.கணேசன், திருக்குறள் உலகம் கல்விச் சாலை அமைப்பின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் வழியில் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திருக்குறள் உலகம் கல்விச் சாலையின் அலுவலகம் திறப்பு விழா கோவையில் அண்மையில் நடைபெற்றது. சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2 ஆவது குறுக்குச் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தில் இனி திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
திறப்பு விழாவில், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன், சூலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரம செயலர் சுவாமி கேசவானந்தா, பேராசிரியர் மா.அருணாச்சலம், சிபி ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் அரங்க கோபால், பாரதியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சு.ஆனந்தவேல், பள்ளிக் கல்வித் துறை அலுவலர் அ.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்குறள் உலகம் கல்விச் சாலையின் நிறுவனர் கி.கணேசன் நன்றி கூறினார்.