வஉசி உயிரியல் பூங்காவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குஞ்சு பொரித்த பெலிகான்
கோவை வஉசி உயிரியல் பூங்காவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பெலிகான் பறவை (கூழைக்கடா) மீண்டும் குஞ்சு பொரித்துள்ளது. இதை ஏராளமானோர் பார்த்துச் செல்கின்றனர்.
கோவை, வஉசி உயிரியல் பூங்காவில் மான், முதலை, பெலிகான், குரங்கு, மயில், வாத்து, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் பொதுமக்கள் பார்த்துச் செல்ல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
இந்தப் பூங்காவில் கடந்த 19 ஆண்டுகளாக 9 பெலிகான் பறவைகள் உள்ளன. இதில் ஆண் பறவைகள் 6, பெண் பறவைகள் 3 ஆகும். இதில் ஒரு பெண் பறவை மட்டும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. அதன் பிறகு பெலிகான் இனப்பெருக்கம் நடைபெறவில்லை. தற்போது, பெலிகான் பெண் பறவை அண்மையில் குஞ்சு பொரித்தது.
இதுகுறித்து, உயிரியல் பூங்கா இயக்குநர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில், பொதுவாக பெலிகான் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் அதன் இனப்பெருக்க விகிதம் குறையும். எனவே, பெண் பெலிகான்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், சத்துமிக்க உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன் பிரதிபலனாக, 14 ஆண்டுகளுக்கு பிறகு பெலிகான் பெண் பறவை மீண்டும் கடந்த ஜூன் மாதத்தில் குஞ்சு பொரித்தது. தற்போது, தாய்ப் பறவையுடன், குஞ்சுப் பறவையும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றார்.