கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் கோவை இளைஞரிடம் இருந்து ரூ.81 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரும் ஹேமாம்பிகா நகர் காவல் நிலைய போலீஸாரும் வெள்ளிக்கிழமை ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை - எர்ணாகுளம் ரயிலில் வந்த பயணி ஒருவர் ரயில் நிலையத்தின் இரண்டாவது பாதை வழியாக பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடித்த போலீஸார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அப்போது, அதில் சுமார் ரூ.81 லட்சம் மதிப்பிலான 2.340 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் அவர், கோவை காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த பாலசியாம் சுந்தர் (32) என்பதும் கோவையில் இருந்து கேரளத்தில் உள்ள நகைக் கடைக்கு நகைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.