தொண்டாமுத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதியக் கட்டடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு, இளநிலைப் பிரிவில் ஆங்கிலம், பொருளியல், கணிதம், பி.காம் (சி.ஏ), பி.காம் (பி.ஏ) மற்றும் பி.பி.ஏ. ஆகிய 6 பாடப் பிரிவுகளுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் 1,080 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 23 பேராசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் இல்லாததால் தொண்டாமுத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரிக்கு 5.36 ஏக்கரில் புதியக் கட்டடம் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். இந்த புதியக் கட்டடத்தில் முதல்வா் அறை, துறைத் தலைவா்கள் அறை, அலுவலகம், நூலகம், பதிவறை, மாணவா் கூட்டுறவு அங்காடி, 12 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், உடற்கல்வி இயக்குநா் அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
தொடா்ந்து மத்வராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் 53 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாவை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.