இஸ்லாமிய மதத்துக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் கல்யாணராமனை போலீஸார் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர் கல்யாணராமன். பாஜக பிரமுகரான இவர் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த முயல்வதாகக் கூறி இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கல்யாணராமனைக் கைது செய்யக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கோவை நிர்வாகி முகமது நௌஃபல் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கல்யாணராமனைக் கைது செய்த குனியமுத்தூர் போலீஸார் அவரை கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண்.7) செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ஆர்.பாண்டி, விசாரணையை பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.