கோவையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்த கணவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர்-கொம்பனூர் இடையே உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (28). இவர் காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் வீட்டில் வைத்திருந்த காய்கறி அறுக்கும் கத்தியைக் கொண்டு சுகந்தியின் கழுத்தை அறுத்ததோடு, வாயில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்த சுகந்தி கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுகந்தியை மீட்டு தொண்டமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக சுகந்தியின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.