கோவையில் இருந்து தில்லிக்குச் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் இருந்து நாள்தோறும் இரவு 7 மணிக்குத் தனியார் விமானம் தில்லிக்கு இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், 126 பயணிகள் அந்த விமானத்தில் தில்லிக்குச் செல்ல வியாழக்கிழமை இரவு காத்திருந்தனர். ஆனால், அந்த விமானம் தாமதமாக இரவு 8.30 மணிக்குதான் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. மேலும் தனது பணி நேரம் முடிந்ததாகக் கூறி விமான ஓட்டுநர் ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் தில்லிக்கு இயக்கப்பட வேண்டிய விமானம் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். மேலும், தில்லிக்கு சென்று அங்கு இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், விமான நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாகச் சென்றதாகவும், அதேபோல அந்த விமானம் தாமதமாக வந்ததாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், மாற்று விமானத்தில் அனுப்பிவைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விருப்பம் உள்ளவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தரத் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து கோவை வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.