கேரள மாநிலத்தில் நிபா' வைரஸ் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் அந்நோய் பரவாமல் தடுக்கும் நோக்கில், மதுக்கரை அருகே தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் மதுக்கரை வட்டார சுகாதார கண்காணிப்பாளர் ரவி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மதுக்கரையை அடுத்த க.க.சாவடி சோதனைச் சாவடி அருகே தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளத்திலிருந்து கோவை மாவட்டம் நோக்கி வரும் அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்களை நிறுத்தி, வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கேட்டறிவதுடன், நிபா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
இப்பணியில் சுகாதார ஆய்வாளர் பூபதி, ராஜ்குமார், வட்டார மருத்துவ அதிகாரி பிரமிளா, நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.