சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈஷா யோக மையம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, கனடா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில், ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளைக் கடந்து மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு உப யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அந்தமான் தீவுகளில் உள்ள மிதக்கும் துறைமுகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு பாதுகாப்புப் படையினர், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் ஆயிரம் பேர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.