கோவை அருகே இடையர்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காளப்பட்டியில் உள்ள திலகர் வீதியில் குடியிருப்பவர் அல்போன்ஸ் (45). இவர் இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். கோவை மாநகராட்சி மேல்நிலை குடிநீர்தொட்டி அருகே உள்ள பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அல்போன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துடியலூர் போலீஸார் சடலத்தை மீட்டு கோவை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.