கோவையில் இருவேறு இடங்களில் பெண்களிடம் நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (55). இவர் தனது மகனுடன் உக்கடம் மீன் சந்தைக்குச் சென்றுவிட்டு லாரி பேட்டை வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒருவர், ரஞ்சிதம் அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து ரஞ்சிதம் அளித்தப் புகாரின்பேரில் கடைவீதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரஞ்சிதத்திடம் இருந்து நகையைப் பறித்துக் கொண்டு ஓடும் காட்சி பதிவாகிஇருந்தது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: கோவை, கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஷீமா சிங் (33). இவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஷீமா சிங்கிடம் இருந்த கைப்பையைப் பறித்துச் சென்றனர். அவரது கைப்பையில், ரூ. 8 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி, வங்கி பற்று அட்டைகள் இருந்துள்ளன. ஏடிஎம்மில் இருந்து ஷீமா சிங் வெளியே செல்வதைப் பார்த்த 2 இளைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்வது கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.