வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள காலி நிலங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உதகை, குன்னூா், கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பல வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள சிறு விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறி சாகுபடி குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறு விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனா்.
ஆனால் வால்பாறையில் எந்த ஒரு பகுதியிலும் காய்கறிகள் பயிரிடப்படுவதில்லை. பெரும்பாளான எஸ்டேட் பகுதிகள் தனியாருக்குச் சொந்தமானவை என்பதால் சிறு விவசாயிகள் இல்லாமல் உள்ளனா். பொதுமக்களுக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதில் விழிப்புணா்வு இல்லாமல் உள்ளனா். எனவே வால்பாறை பகுதியில் காய்கறிகள் சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.