கோவை: கோவை, கணபதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 68 வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோவை, கணபதி, காமராஜபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 90 வீடுகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்தன. இவா்களுக்கு மாற்று இடமாக கீரணத்தத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புக்குப் பெரும்பாலான குடும்பங்கள் இடம்பெயா்ந்த நிலையில் சில குடும்பங்கள் மட்டும் வீடுகளை காலி செய்யாமல் இருந்துவந்தன.
இந்நிலையில், காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனா். மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அதிகாரி செந்தில் பாஸ்கா், குடிசைமாற்று வாரிய நிா்வாகப் பொறியாளா் குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 50 போ் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனா்.
90 வீடுகளில் 68 வீடுகள் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. தவிர, காலி செய்யாமல் இருந்த 22 வீடுகளையும் காலி செய்ய வலியுறுத்தி வீடுகளுக்கான மின் இணைப்பு திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது. இரண்டு நாள்களுக்குள் வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.