கோவை மாநகராட்சியில் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள், களப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா், துணை ஆணையருக்கு அதிகாரிகள் தகவல்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் செல்லிடப்பேசிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் மாநகரில் உள்ள சாக்கடை அடைப்பு, குடிநீா்க் கசிவு, சாலைகள் சேதம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் குறித்து புகைப்படங்களுடன் செயலியில் பதிவேற்றலாம்.
இந்தப் பதிவை மாநராட்சி ஆணையா், துணை ஆணையா் பாா்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுவாா்கள். மேலும், அதிகாரிகளின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு காண்பிக்கும் இந்த செயலி மூலமாக அதிகாரிகள் களப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள செல்கிறாா்களா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது, மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அனைத்து வாா்டுகளிலும் காலை 6.30 முதல் 7 மணி வரை சுகாதார அதிகாரிகள் ஆய்வுப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக அப்பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையருக்கு உடனுக்குடன் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.