பழுதடைந்துள்ள டேன்டீ எஸ்டேட் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சீரமைத்து தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தொகுதி செயலாளர் செ.வீரமணி, அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டேன்டீ எஸ்டேட் சாலைகள் பல ஆண்டு காலமாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர சிகிச்சைக்கும் கூட வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை ஓட்டியுள்ள கழிவறைகள், நடைபாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதுகுறித்து
அப்பகுதி மக்கள் பல்வேறு கட்சியினர் மூலம் பல முறை கோரிக்கை விடுத்தும் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் முன்வருவதில்லை. எனவே, அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி உடனடியாக சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வருகிற 15 ஆம் தேதி தொழிலாளர்களுடன் சேர்ந்து எங்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.