நெகமம் அருகே மகாலட்சுமி கோயிலில் நான்கு ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், நெகமத்தை அடுத்த கப்பளாங்கரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான மகாலட்சுமி கோயில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி நாள்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வர். இந்தக் கோயிலுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் ஆன இரண்டு மகாலட்சுமி சிலைகள், இரண்டு பெருமாள் சிலைகள் பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், பூசாரி சுப்பிரமணியம் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றார். வெள்ளிக்கிழமை காலை வந்துபார்த்தபோது கோயிலில் வைக்கப்பட்டிருந்த 4 ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம், ஒட்டியாணம், அம்மனின் தங்கத் தாலி ஆகியவை திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து நெகமம் போலீஸாருக்கு பூசாரி தகவல் தெரிவித்தார். போலீஸார் கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். கோயிலின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து சிலைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பளாங்கரை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.