கேட்டரிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்தன.
கோவை, தண்ணீர்ப் பந்தல் அருகே வி.கே.சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவருக்குச் சொந்தமான கேட்டரிங் மையம் பீளமேடு, விளாங்குறிச்சி பகுதியில் இயங்கி வருகிறது.
அங்குள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வரும் நிறுவனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கரும்புகை வெளியேறியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பீளமேடு, கணபதி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 25 பேர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கட்டடத்தின் உள்ளே இருந்த சமையல் பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது.
கேட்டரிங் நிறுவனத்துக்கு அருகிலேயே எரிவாயு உருளை நிறுவனம் இயங்கி வருகிறது. தீ விரைவில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.