கோவையில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை சங்கனூர் சாலை, கண்ணப்ப நகர் காவல் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகை இருந்தது. விசாரணையில், அப்பகுதியில் உள்ள மூன்று ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால், அதில் ஒரு வங்கிக்கு உரிய பணத்துக்கான ஆவணம் மட்டுமே இருந்தது.
எனவே மீதமுள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதற்குரிய தொகை ரூ.1 கோடியே 3 லட்சத்தை அதிகாரிகள், பறிமுதல் செய்து சார் ஆட்சியர் அமுதனிடம் ஒப்படைத்தனர்.