பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
மேட்டுப்பாளையத்தில் தகாத தொடர்பில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருள் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி ஜோதிமணி (45). இவருக்கு, வெள்ளியங்கிரி என்பவருடன் தகாத தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் ஜோதிமணி, வெள்ளிங்கிரியுடனான தொடர்பை கடந்த சில நாள்களாக துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜோதிமணியின் வீட்டுக்கு சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த ஜோதிமணியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஜோதிமணியின் மகன் ராம்குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தலைமறைவான வெள்ளியங்கிரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரும் தற்போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.