வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்த திமுக பிரமுகரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த ரூ.19 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (50). திமுக பகுதி பொருளாளராக உள்ளார். இவர் ராஜூ நாயக்கர் தோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீஸார் வரதராஜனைக் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.19 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர்.
இதேபோல பேரூர் ராமசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (53), அதிமுக பிரமுகர். இவரது பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் பெண்கள் சிலர் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுள்ளனர். இதைப் பார்த்த நடராஜன், அப்பெண்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக விவரங்களைச் சேகரிப்பதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் நான்கு பெண்கள் மீது பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.