அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட குன்னத்தூராம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வடக்கு வருவாய் கோட்டாட்சியர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட குன்னத்தூராம்பாளையத்தில் ஒரு ஏக்கர் 10 சென்ட் மந்தை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வருவாய்த் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினர்.
இந்நிலையில், திட்டம் தொடர்பாக வடக்கு வருவாய் கோட்டாட்சியர் டெய்ஸிகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டினால் துர்நாற்றம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள், பொது சுகாதார வளாகம், கோயில் உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறுவதாக வருவாய் கோட்டாட்சியர் டெய்ஸிகுமார் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அன்னூர் வட்டாட்சியர் வசந்தாமணி, வருவாய் ஆய்வாளர் இலியாஸ் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் காந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.