கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உள் நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி அண்மையில் தொடங்கியது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் உடைமைகள் அடிக்கடி திருட்டு போவதாக புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு அடையாள அட்டை வழங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூ.அசோகன் முடிவு செய்தார். இதையடுத்து நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. நோயாளிகளின் உறவினர், பாதுகாவலர் யாரேனும் ஒருவர் தங்களது பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி இந்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து முதல்வர் அசோகன் கூறும்போது, முதல் நாளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனையில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படும் என்று நம்புகிறோம். அடையாள அட்டை பெறும் இடத்தில் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.