கோவை மாநகராட்சி, 72-ஆவது வார்டில் குடிநீர்க் குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாநகராட்சி, 72-ஆவது வார்டு, மாரியப்பா வீதியில் வாரம் இருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அவ்வழியாகச் சென்ற வாகனம் குடிநீர்க் குழாய் மீது மோதியது. இதில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது.
இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அக்குழாயை மூடி அடைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் ஆகியும் சேதமடைந்த குழாய் சரி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதமடைந்த குடிநீர்க் குழாயைச் சரிசெய்யக் கோரி, மாநகராட்சி அலுவலர்களிடம் 3 முறை நேரில் சென்று கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம் என்றனர்.